Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் - முதியோர், பெண்களுக்கு சேவை மையம் தொடக்கம் :

தருமபுரி

ஊரடங்கு காலத்தில் முதியோர் மற்றும் பெண்களுக்கு உதவ தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதியோருக்கு உதவும் வகையில் மாவட்ட காவல்துறை மூலம் ஏற்கெனவே, ‘ஹலோ சீனியர்ஸ்’ என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை 04342-233850 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். அதேபோல, கரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காலமான தற்போது பெண்களின் உதவிக்காக காவல்துறை மூலம் 24 மணி நேர சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, எஸ்பி பிரவேஷ்குமார் தொடங்கி வைத்துள்ளார். இம்மையத்தை 95855 85154 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதுதவிர, மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்ட பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக உரிய அலுவலகம் சென்று நிவாரணம் தேட முடியாத நிலை ஏற்படும்போது பயன்பெறும் வகையில் 24 மணி நேர சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, 89399 26100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாதுகாப்பு, தேவைகள், தகவல்கள் மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக தகவல் அளித்தால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்பு கொள்ளும் புகார் அளிப்போரின் பெயர், முகவரி உள்ளிட்டவைகள் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x