Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து - கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு :

கல்பாக்கம் நகரியப் பகுதியில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அணுசக்தி துறை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என ஊழியர்கள் வட்டாரங்களில்குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் அங்கு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கல்பாக்கம் மற்றும் அணுபுரம் நகரியப் பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அணுமின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், கல்பாக்கம் நகரியப் பகுதியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய அணுசக்தி துறை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை, சென்னை அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்களுக்கு முதலுதவி சிகிச்சைகளும் வழங்கப்படுவதில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அணுசக்தி துறை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, கடந்த 8-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நகரியப் பகுதியில் உள்ள அணுசக்தி துறை மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், அணுபுரம் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவமனையைப் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x