Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் - சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆய்வு :

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டப்பேரவைஉறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவரவர் தொகுதிகளில்பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்க வேண்டும். தங்கள் தொகுதிகளில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்துதேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ அரசின் கவனத்துக்கு விரைந்து கொண்டுவர வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அதனடிப்படையில், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று முன்தினம் மாலை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து, மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, பொன்னேரி சென்ற டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டப்பேரவைஉறுப்பினர் துரை. சந்திரசேகருடன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், பொன்னேரி கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், படுக்கை வசதி, ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து, இருவரும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x