Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

முறைகேடாக சாலை அமைப்பதாக புகார் கூறி - திமுகவினர் முற்றுகையால் பணிகள் நிறுத்தம் :

குடிமங்கலம் பகுதியில் அரசு செலவில் முறைகேடாக சாலை அமைப்பதாகக் கூறி, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது கொண் டம்பட்டி கிராமம். அங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். திருப்பூர் பிரதான சாலையில் இருந்து கிராமத்துக்குச் செல்ல தார்சாலை உள்ளது. என்.ஆர்.ஜி.எஸ். திட்டம் சார்பில், இந்த கிராமத்தில் ரூ.17.25 லட்சம் செலவில் ஒரு கி.மீ. தூரத்துக்கு தார் சாலை அமைக்கமுடிவு செய்யப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சாலைப்பணிநடைபெறும் இடத்தை குடிமங்கலம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள் கூறும் போது, “குடியிருப்புகள் இல்லாத பகுதிக்கு சாலை அமைக்கப்படுகிறது. இதனால் அரசுப் பணம்விரயமாகிறது. பணிகளை நிறுத்தவேண்டும்” என்றனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திமுகவினர் அதனை ஏற்காததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறிச் சென்றனர்.

இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஷெல்டன் கூறும்போது, “கடந்த ஆட்சியின்போது அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைமனுவின் அடிப்படையில் சாலை அமைக்கப்படுகிறது. திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x