Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
கேளம்பாக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை உள்ள நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் தவித்தவர்கள், வாக்குச்சாவடி மைய அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கத்தில், காவல் நிலையம் எதிரேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை முதலே ஏராளமானோர் வாக்களித்தனர்.
இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் அந்த வாக்குச்சாவடி மையத்துக்கு வந்த சிலரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி, வாக்குச்சாவடி மைய அலுவலர் வாக்களிக்க அனுமதிக்க மறுத்து, வெளியே அனுப்பினார்.
இதையடுத்து, வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள், "வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், தங்களது பெயர்கள் நீக்கப்பட்டது எப்படி?" என்று கேட்டு, வாக்குச்சாவடி மைய அலுவலருடன் வாக்குவாதம் செய்தனர். எனினும், பலர் வாக்களிக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேபோல, கேளம்பாக்கம் மற்றும் தாழம்பூர் பகுதிகளில் ஏராளமான வாக்காளர்கள், பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி திரும்ப அனுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், அவர்களால் வாக்களிக்க முடியாது. தவறுதலாககூட வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் விடுபட்டிருக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால், சம்மந்தப்பட்டவர்கள், வாக்குச்சாவடி மைய அலுவலரைத் தொடர்புகொண்டு, டெண்டர் வாக்கு அளித்திருக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT