Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

வனம், கடலில் இருந்து வெளியே வரும் உயிரினங்களை பாதுகாக்க கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை

வனம் மற்றும் கடலில் இருந்து வெளியே வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் மீண்டும் வாழிடம் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் விலங்குகள் மனிதனைத் தாக்குவதும் மனிதர்கள் விலங்குகளைத் தாக்குவதும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக வன விலங்குகள் வனத்திலிருந்து வெளியே வருகின்றன. இந்த வன விலங்குகளை மனிதர்கள் விரட்டியடிப்பதும், வன விலங்குகள் மனிதர்களை விரட்டுவதும் நடைபெறுகிறது.

இதுபோன்று வனத்தை விட்டு வெளியே வரும் விலங்குகளை மீண்டும் வனத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடல் வாழ் உயிரினங்களும் பல்வேறு காரணங்களால் கடலுக்கு வெளியே வரும் போது மனிதர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற கடல் வாழ் உயிரினங்களை மீட்டு மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா அலைபேசி எண் வழங்கவும், காடுகளை விட்டும், கடலை விட்டும் வெளியே வரும் உயிரினங்களைக் கண்காணிக்கவும், மீட்டு மீண்டும் வாழிடத்துக்கு அனுப்பவும் மாவட்டம் வாரியாக சுகாதார பிரிவு திறக்கவும், வனம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்க நடமாடும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும் தேசிய வனவிலங்கு செயல்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x