Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட அகவலம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், அம்மனூருக்கும், ரெட்டிவலம் கரு.திருமாறன் கரிவேடு கிராம நிர்வாக அலுவலராகவும், பெருமூச்சி குமரவேல், இச்சிப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலராகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள மூன்று பேருக்கான உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேகரிடம் முறையிட்டுள்ளனர். இதில், உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து இடமாறுதல் உத்தரவு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையேற்று, கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 3 பேரின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படும்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x