Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
உதகை: நீலகிரி மாவட்டம் கல்லட்டி சாலை மலைப்பாதையாக இருப்பதாலும், விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டதாலும், கடந்த 2019-ம் ஆண்டுமுதல் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சாலையை சீர் செய்த பின்பு கடந்த 8-ம் தேதி முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. முதல்நாளே கல்லட்டி மலைப்பாதையில் விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் உதகையிலிருந்து கேரளாவுக்கு சென்ற கார், கல்லட்டி சாலையில் 21-வது கொண்டை ஊசி வளைவில் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த ஆறு பேர் காயமடைந்து, மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டனர். இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் கூறும்போது, ‘‘கல்லட்டி மலைப் பாதையில் தொடர்ந்து நிகழும் விபத்துகள் காரணமாக, உதகையிலிருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக மசினகுடிக்கு வெளிமாநில வாகனங்கள் செல்ல வரும் 23-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் உரிய ஆய்வுகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. வெளி மாநில வாகனங்களை இச்சாலையில் தொடர்ந்து இயக்க அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT