Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

 சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் பிப். 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது

கோவை சின்னியம்பாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், செயற்கைக்கோள் தரைதள கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ தலைவர் கே.சிவன் இணைய வழியாக இன்று தொடங்கிவைக்கிறார்.

இதுகுறித்து கல்லூரியின் தலைவர் செ.தங்கவேலு கூறியதாவது: வரும் பிப்ரவரி 22-ம் தேதி ரூ.2.50 கோடி மதிப்பில் உருவான ‘ சக்தி சாட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம்  ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2010 -ம் ஆண்டில் எங்கள் கல்லூரியிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் ஒரு செயற்கைக்கோள் ஆய்வகத்தை அமைத்தோம்.

அன்றிலிருந்து சொந்தமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்ற புதுமுயற்சியுடன் செயல்பட்டனர். எங்கள் செயற்கைக்கோள் 460 கிராம் மட்டுமே எடை கொண்டது. முக்கியமான அமைப்புகளைக் கட்டுப் படுத்துவதற்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தலாம். உதாரணமாக தண்ணீர் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயு கசிவு போன்றவற்றை கண்டறிவதற்கும், அதன் வால்வுகளை திறந்து மூடுவதற்கும் இந்த செயற்கைக் கோளைப் பயன்படுத்தலாம். வங்கிகள் மற்றும் பிற பாதுகாப்புப் பகுதிகளில் நிகழும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x