Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார்.
மீனவர்கள் பேசும்போது, “சொத்தவிளை கடற்கரை சாலை,சங்குத்துறை கடற்கரை, இரையுமன்துறை, இனயம் பகுதிகளில் உள்ள சாலைகள் கடல் சீற்றத்தால் சேதமடைந்து விட்டன. கடற்கரை பகுதிகளில் உள்ள பூங்கா மற்றும் இருக்கைகள் பழுதாகிவிட்டன. எனவே, சாலைகளை தாமதமின்றி சீரமைக்க வேண்டும். பள்ளம்துறையில் கடல் நீர் ஊருக்குள் புகாதவாறு கடல் அரிப்பு தடுப்புச் சுவரை நீட்டிக்க வேண்டும்” என்றனர்.
மீனவர்கள் மேலும் பேசும்போது, “ சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குசெல்லும் மீனவர்கள் 48 மணி நேரத்துக்குள் கரை திரும்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை 96 மணி நேரமாக நீட்டிப்பு செய்ய வேண்டும்” என்றனர்.
ஆட்சியர் பேசும்போது, “ கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ள சங்குத்துறை, சொத்தவிளை உட்பட கடற்கரை சாலைகளை சீரமைக்கும் பணி, சேதமடைந்த சங்குத்துறை கடற்கரையை மேம்படுத்தும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும். பள்ளம்துறையில் 120 மீட்டர் நீளத்துக்கு கடல் அரிப்பு தடுப்புச் சுவரை நீட்டிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சின்னமுட்டம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் நேரத்தை அதிகரிப்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மீன்வளத்துறை துணை இயக்குநர் காசிநாத பாண்டியன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரிஷாப், மீன்வளத்துறை உதவி இயக்குநர் விர்ஜில் கிறாஸ், பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் வசந்தி பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT