Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் தீ ஆவணங்கள், கணினிகள் எரிந்து நாசம்

ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள், கணினிகள் எரிந்து நாசமாகின.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடத்தின் கீழ்தளத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம் செயல்படுகிறது. இங்கு ராமநாதபுரம் கே.கே.நகரைச் சேர்ந்த பழனி(57) என்பவர் நேற்று முன்தினம் இரவு காவலாளியாகப் பணியில் இருந்தார். அதிகாலை 12.30 மணி அளவில் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள், கணினிகள் உள்ள பகுதியில் தீப்பற்றி அலுவலகம் முழுவதும் பரவியது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

எனினும், மரத்தாலான பீரோக்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அதில் முக்கிய ஆவணங்கள் இருந்தன. அதன் அருகே மூட்டைகளாகக் கட்டி வைத்திருந்த பழைய, புதிய ஆவணங்களும் எரிந்தன. மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்துக்கும் மேற்பட்ட கணினிகள், பிரிண்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மின்விசிறிகள் எரிந்து சேதமடைந்தன.

இந்தத் தீ அருகே உள்ள உள்ளாட்சி தணிக்கைத் துறை அலுவலகத்திலும் பரவியது. அங்கிருந்த கணினிகள், பிரிண்டர்கள் உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதமடைந்தன.

இது குறித்து கல்வித் துறையினரிடம் கேட்டபோது, தீப்பற்றியதில் ஆசிரியர்களின் பணி சேவைக்கால ஆவணங்கள், பணி உயர்வுக்கான ஆவணங்கள், வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என்றனர்.

தீயணைப்பு, பொதுப்பணித் துறையினர் கூறும்போது, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏற்பட்டிருந் தால் மின்சார சர்க்யூட் உடனடியாக அணைந்திருக்கும். அதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றனர்.

இது குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x