Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
தருமபுரியில் நடந்த சாலை பாது காப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ஆட்சியர் உட்பட 500-க்கும் மேற்பட்ட மகளிர், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றனர்.
தருமபுரியில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி 4-ம் நாளாக விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆட்சியர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்ற, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை எஸ்பி பிரவேஸ்குமார், துணை ஆட்சியர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுதொடர்பாக ஆட்சியர் கார்த்திகா கூறியதாவது:
நிகழாண்டில் சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்கிற கருப்பொருளை மையப்படுத்தி, சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் தூக்கமின்மை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்கும் விதமாக சாலைப் பாதுகாப்பு மாத காலத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத் துறை, தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மகளிர் இருசக்கர விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தருமபுரி 4 முனை சந்திக்கும் சாலை வரை நடந்த பேரணியில் ஆட்சியர் கார்த்திகா தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் ஆர்த்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், டிஎஸ்பி அண்ணாதுரை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முனுசாமி, மணிமாறன், சிவக்குமார், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வு
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்ற கருத்தை வலியுறுத்தி போக்குவரத்து துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 4 மணியளவில், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூக்களையும், தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். மேலும், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதே போல், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புச் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT