Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
காவிரி உபரி நீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தருமபுரியில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், மாநில துணைப் பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரி 6-வது கட்டமாக, தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. எங்கள் போராட்டம், எந்த அரசியல் கட்சிக்கும், சமூகத்துக்கும் எதிரானது அல்ல. பாமக இட ஒதுக்கீடு போராட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். எனவே, தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல், இக்கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். சட்டப்பேரவை தேர்தலைக் காட்டிலும், இடஒதுக்கீடு பெறுவதில் உறுதியாக உள்ளோம்.
மேலும், மழைக் காலங்களில் ஒகேனக்கல் காவிரியில் உபரியாக செல்லும் நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். ஏற்கெனவே, இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். தொப்பூர் கணவாய் சாலையை மேம்படுத்த வேண்டும். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் எம்பி பாரிமோகன், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT