Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

ஊடேதுர்கம் காப்புக்காட்டில் 30 யானைகள் முகாம்

ஊடேதுர்கம் காப்புக்காட்டுப் பகுதியில் 30 யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊடேதுர்கம் காப்புக்காட்டில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள 30 யானைகள், இரவு நேரங்களில் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து அங்கு அறுவடை செய்யப்பட்டுள்ள கேழ்வரகு மற்றும் இதர பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வனச்சரகர் நாகராஜன் கூறியதாவது:

ஊடேதுர்கம் காப்புக்காட்டில் 30 யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளை கண்காணிக்கும் பணியில் தலா 6 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இரவு வேளையில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காப்புக்காட்டில் 30 யானைகள் முகாமிட்டிருப்பது குறித்து வனத்தை ஒட்டியுள்ள நாகமங்கலம், ஊடேதுர்கம், பாவாடைபட்டி, யூபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எச்சரிக்கை செய்யும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x