Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

பால கட்டுமான பணியை விரைந்து முடிக்கக் கோரி முற்றுகை போராட்டம்

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே பால கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேகல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சேதமடைந்த நிலையில் இருந்த பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், போக்குவரத்துக்கு வழியின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். எனவே, பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக அலுவலகத்துக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) க.அன்பரசன், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் அங்கு சென்று, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பால கட்டுமானப் பணியை விரைந்து முடிப்பதாக உறுதி அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x