Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM
பள்ளிகளை திறப்பது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதள வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது நோய் தொற்றுப் பரவல் சற்று தணிந்துள்ளதை அடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தர தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறிஇருப்பதாவது:
பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணி, கிருமிநாசினி தெளிக்கும் முறை, வகுப்பறைகள், கழிப்பறைகளின் தூய்மையை உறுதிசெய்தல், வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி, முகக்கவசங்கள் ஆகியவை போதியளவில் இருப்பதை உறுதிசெய்தல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.
அந்த அறிக்கையை நாளை (ஜனவரி 18) மாலைக்குள் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிகளை முடிக்காவிட்டால் அதற்குரிய விளக்கத்தை தலைமை ஆரியர்கள் அறிக்கையுடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி, முகக்கவசங்கள் ஆகியவை போதியளவில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT