Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

தொடர்ந்து 34-வது நாளாக நிரம்பியதால்அமராவதி அணை உபரி நீர் ஆற்றில் திறப்பு

உடுமலை: அமராவதி அணை அதன் முழு கொள்ளளவை 34-வது நாளாக எட்டியதால் அணையில் இருந்து உபரிநீர் நேற்று ஆற்றில் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடி. மொத்த கொள்ளளவு 4 டிஎம்சி. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கிடைத்ததால் அணை நிரம்பியது. நேற்று 34-வது நாளாக அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, கடந்த டிசம்பர் 5-ம் தேதி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 4,264 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர் மட்டம் 89.31 அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 1150 கனஅடி நீரும், பிரதான வாய்க்காலில் விநாடிக்கு 850 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் அணைக்கு வரவாக கிடைத்த நீர்,உபரியாக வெளியேற்றப்பட்டது. நேற்று 34-வது நாளாக அணைக்கு விநாடிக்கு 8021 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர் மட்டம் 89.24 அடியாக இருந்தது. ஆற்றில் விநாடிக்கு 3,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

கேரள மாநிலத்திலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், அணையின் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x