Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

தொடர் சாரல் மழையால் குரங்கணி, அடுக்கம் மலை சாலையில் மண் சரிவு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் குரங்கணி, அடுக்கம் உள்ளிட்ட மலைப் பாதைகளில் மண், பாறைகள் சரிந்து வருகின்றன. பெரிய அளவில் மண் சரிவு அபாயம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஒரு வாரமாகச் சாரல் மழை பெய்கிறது. இதனால் குளிர் நிலவுகிறது. போடியில் இருந்து குரங்கணி செல்லும் மலைப் பாதையின் இடது ஓரம் முழுவதும் அடர்த்தியான மண், பாறைகளைக் கொண்டுள்ளது. தொடர் மழையால் பிடிப்புத்தன்மை குறைந்து சிறிய பாறைகள் உருண்டு வருகின்றன.

இதேபோல் பெரியகுளம் கும்பக்கரையில் இருந்து அடுக்கம் செல்லும் மலைப் பாதையில் சாமக்காட்டுப்பள்ளம், குருடிக்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், மழை நேரங்களில் மலைப் பாதையில் பயணிப்பது ஆபத்தானது. தொடர்ந்து ஈரமாகவே இருப்பதால் பிடிப்புத் தன்மை குறைந்து மண், பாறைகள் சரிகின்றன. உடனுக்குடன் இவை அகற்றப்படுகின்றன. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரிய அளவில் மண் சரிவு அபாயம் உள்ளது என்றனர்.

மேகமலையிலும் இதே நிலை தொடர்வதால் மலைப் பாதைகளில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x