Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM

தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம் முதல்பரிசை வென்ற அமைச்சரின் வண்டிகள்

தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் வண்டிகள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், தூத்துக்குடி அருகே முத்தையாபுரம்- துறைமுக சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இப்போட்டிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டு வண்டி என 2 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி போட்டிக்கு 10 மைல் தொலைவும், சிறிய மாட்டுவண்டி போட்டிக்கு 6 மைல்தொலைவும் சென்று திரும்பும் வகையில் பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாட்டுவண்டி போட்டியில், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டுவண்டி முதலிடத்தையும், ஜக்கம்மாள்புரம் தாவிது மாட்டுவண்டி இரண்டாம் இடத்தையும், நாலந்தாவை சேர்ந்த மகாவிஷ்ணு மாட்டுவண்டி மூன்றாவது பரிசையும் பெற்றன.

சிறிய மாட்டுவண்டி போட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டுவண்டி முதலிடத்தையும், பாளையங்கோட்டை டேவிட்பாண்டியன் மாட்டுவண்டி இரண்டாவது இடத்தையும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி மாட்டுவண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. பரிசுகளை அமைச்சர் வழங்கினார். போட்டிகளை காண்பதற்காக சாலையில் இருபக்கங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x