Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

மெரினா கடற்கரை, மாமல்லபுரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி, சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

8 மாத இடைவெளிக்குப் பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மக்கள் சென்று, வரவசதியாக கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் மெரினா, திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை, மாமல்லபுரம் கோவில் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல், கூடுதல் பேருந்துகளை இயக்க தொடர்புடைய கிளைமேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஞாயிறு போன்ற விடுமுறைநாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளோம். கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து பயணத்தின்போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x