Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

திற்பரப்பு அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் மும்முரம் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முன்னேற்பாடு

`இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, திற்பரப்புஅருவியில் சுற்றுலா பயணிகளைஅனுமதிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்தினர் மும்முரமாக மேற்கொண்டனர்.

`குமரி குற்றாலம்’ என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, நுழை வாயில் அடைக்கப்பட்டது.

கடந்த மாதம் குமரி வந்த தமிழக முதல்வர் கே.பழனிசாமி குமரியில் சுற்றுலா பயணிகளுக்கான தடைநீக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்படும் எனவும், படகு போக்குவரத்து தொடங்கும் எனவும் அறிவித்தார். இதன்படி, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

அதேநேரம், திற்பரப்பு அருவி பகுதிக்கு இதுவரை சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 9 மாதமாக தடைநீடிப்பதால், திற்பரப்பு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். குமரியில் அனைத்து சுற்றுலா மையங்களை திறந்த போதிலும் திற்பரப்பு அருவி திறக்காமல் இருப்பது குறித்தும், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவது குறித்தும் கடந்த 10-ம் தேதி `இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து, திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நேற்று தொடங்கியது. 9 மாதங்களாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் பாசி படர்ந்து காணப்படும் அருவி பகுதியில் உள்ள கான்கிரீட் தளங்கள், பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. அங்குள்ள சிறுவர் நீச்சல் குளம், கழிப்பறை, பூங்கா பகுதிகளில் வழுக்கும் தன்மையை நீக்கும் வகையில் சீரமைத்து முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின்ஜோஸ் கூறியதாவது:

குமரியில் உள்ள சுற்றுலா மையங்களை திறப்பதற்கு முதல்வர் அறிவித்திருந்த நிலையில், திற்பரப்பு அருவியில் மக்களை அனுமதிப்பதற்கான முறையான உத்தரவு எங்களுக்கு இதுவரை வரவில்லை. தற்போது, திற்பரப்பு அருவியில் பராமரிப்பு பணிகளை பேரூராட்சி பணியாளர்கள் மூலம்மேற்கொண்டு வருகிறோம். அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதனால் விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x