Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM
பாலக்கோடு வட்டம் மாரண்ட அள்ளி அருகிலுள்ள சங்கிலி நத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயி அய்யப்பன்(46). இவருக்கு முனியம்மாள்(40) என்ற மனைவியும், மணி(25), சபரி(23) என்ற மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். 2 மாதம் முன்பும் தகராறு ஏற்பட்ட நிலையில் முனியம்மாள் ஈச்சம்பள்ளத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் அய்யப்பன் மாயமானார். குடும்பத்தார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், சங்கிலி நத்தம் அருகிலுள்ள முகுடு மடுவு வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மாரண்ட அள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீஸார் ஆய்வு செய்தபோது மண்ணில் உடல் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தோண்டிப் பார்த்ததில் பாதியளவில் எரியூட்டப்பட்ட ஆண் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், கொலை செய்து புதைக்கப்பட்டது அய்யப்பன் என உறுதி செய்யப்பட்டது. கொலை செய்து வனத்தில் புதைத்தது யார், கொலைக்கான பின்னணி என்ன என்று போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT