Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

புதுவையில் இன்று முழு அடைப்பு பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டம் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ உள்ளிட்டவை இயங்காது.

மத்திய அரசு நாடாளுமன்றத் தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூகநல அமைப்பினர், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ (எம்-எல்), மதிமுக மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி, எஸ்யூசிஐ கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் புதுவையில் இன்றுகாலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்குகிறது. தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள் ளதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ஆகியவை இயங்காது. தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட் வியாபாரிகள், வணிகர் சங்கங்கள் இவையனைத்தும் மூடப்படுகின்றன.

பந்த் போராட்டத்தையொட்டி ராஜா தியேட்டர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடக்கிறது..

முதல்வர் கருத்து

பந்த் போராட்டம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “பந்த் போராட்டத்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவு தந்துள்ளது. காங்கிரஸ் தொண்டர் என்ற முறையில் நாங்கள் கட்டுப்படுகிறோம். ” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x