Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

கடுவையாற்றில் மூழ்கிய 3 பைபர் படகுகள்

நாகையில் கனமழை காரணமாக 3 பைபர் படகுகள் கடுவையாற்றில் மூழ்கின.

‘நிவர்’ புயல் எச்சரிக்கையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1,500 விசைப்படகுகள் கடந்த 23-ம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குறைந்த அளவிலான பைபர் படகுகளே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

‘புரெவி’ புயல் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 2-ம் நாளாக 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதனிடையே புயல் சின்னம் வலுவடைந்து வருவதால் நாகை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால், துறைமுகம் மற்றும் கடற்கரையோரம் கொட்டப்பட்டுள்ள கருங்கல் தடுப்புகளை தாண்டி 5 அடி உயரத்துக்கு மேல் கடலில் அலைகள் எழுவதால், மீனவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

மேலும், கனமழை காரணமாக நாகை அக்கரைப்பேட்டை துறைமுகம் பகுதியில் உள்ள கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன், பாலகிருஷ்ணன், கீச்சாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கு சொந்தமான 3 பைபர் படகுகளில் மழைநீர் நிரம்பியதால், அவை கடுவையாற்றில் மூழ்கின. இதையடுத்து மீனவர்கள் அந்த படகுகளை மீட்டு கரையோரம் நிறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x