Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, காரைக்காலில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை பணி நேற்று தொடங்கியது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ்(வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.
அதன்பின், அறையில் வைக்கப்பட்டிருந்த 378 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 200 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 196 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவற்றை பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டது. பெல் நிறுவனத்திலிருந்து வந்துள்ள 4 பொறியாளர்கள் மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு, சரியாக இயங்கும் இயந்திரங்கள் இளஞ்சிவப்பு வண்ண முத்திரைத்தாள் கொண்டு சீல் வைக்கப்பட்டு, அவற்றின் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கையொப்பம் பெறப்படும். இப்பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT