Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை

வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

சாத்தூரில் சார்பு நீதிமன்றம் தொடக்க விழா வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா வரவேற்றார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி சாத்தூர் புதிய சார்பு நீதிமன்றத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, அப்துல்குத்துஸ் ஆகியோர் பேசியதாவது: மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் புதிதாக நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சாத்தூர் நீதிமன்றத்தில் இதுவரை சார்பு நீதிமன்றம் இல்லாமல் பொதுமக்கள் சிவகாசி வந்து செல்லும் நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறி சாத்தூரிலேயே சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

சாத்தூர் அதிகார வரம்புக் குட்பட்ட சார்பு நீதிமன்றத்துக்காக 718 வழக்குகள் இனம் கண்டறியப் பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் மற்றும் சார்பு நீதிபதி மாரியப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சார்பு நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அனைத்து நீதிபதிகள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள், சாத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கருப்பசாமி, செயலர் மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x