Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத்தீர்வு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திரரெட்டி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுதோறும் 65 சதவீதம் மழை பெறப்படுகிறது. இந்த மழையை பேரிடராக கருதாமல் மழைநீரை சேமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல் பட்டதுபோல கூடுதல் மழைப் பொழிவின் போதும், வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கான நீர்வரத்து குறித்தும், அவைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையால் பாதித்த தபால் தந்தி காலனி, பிரையண்ட் நகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், விளாத்திகுளம் பகுதியில் ஒருசில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அனைத்து துறைகளும் பேரிடர் காலங்களை சமாளிக்க ஆயத்த நிலையில் இருக்கின்றன. ஒரு வேளை மழையால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை வந்தால் பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடையும். அப்போது இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இதுவரை 22 சதவீதம் குறை வாக பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உபரியாக மழை பெய்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது என்றார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ணலீலா, அனிதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர்கள் பத்மா, அண்ணாத்துரை மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x