Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை

சோளிங்கர்: சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் ரூ.50 ஆயிரம் அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை கண்காணித்தனர். அப்போது, அலுவலகத்தில் இருந்து சார் பதிவாளர் அருள் (40) என்பவர் தனது காரில் அரக்கோணம் நோக்கி சென்றார். அந்த காரை பின்தொடர்ந்து சென்றபோது சிறிது தொலைவில் ஒரு நபரிடம் இருந்து பணத்தை அருள் வாங்கினார்.

இதையடுத்து, அவரை சுற்றிவளைத்த காவல் துறையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், சார் பதிவாளர் அருளை அலுவல கத்துக்கு மீண்டும் அழைத்து வந்து சோதனையை தொடங்கினர். அங்கு புரோக்கர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள் சிலரை சோதனையிட்டதில், கணக்கில் வராத பணம் ரூ.50 ஆயிரம் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இதில், அருளிடம் இருந்து மட்டும் கணக்கில் வராத பணம் ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சார் பதிவாளர் அருள், வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளும் காதலர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்துள்ளது விசாரணை யில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x