Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

பயிர் பாதிப்பு நிவாரணத்தை உயர்த்தி தர வேண்டும் : முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை

புதுச்சேரியில் பயிர் பாதிப்பு நிவாரணத்தை உயர்த்தி தர முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டுகளை விட தற்போது மழைப் பொழிவு அதிகளவில் உள்ளது. அத்துடன் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றிலும், சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணை ஆற்றிலும் மீண்டும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகூர், கரிக் கலாம்பாக்கம், புதுக்குப்பம், சோரியாங்குப்பம், குருவிநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று வெள்ளநீர் புகுந்து பாதித்தது. அப்பகுதியில் வீடுகளும், விளை நிலங்களும் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி நேற்று பாகூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது கரிக்கலாம்பாக்கத்தில் முதல்வரை சந்தித்த விவசாயிகள், “தொடர் கனமழையாலும், ஆற்றுநீர் புகுந்தும் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துவிட்டன. பயிர்கள் சேதத்துக்காக அரசு தரப்பில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளதை விரைந்து கணக்கிட்டு தர வேண்டும். அத்துடன் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இழப்பீட்டை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்” என்று கோரினர்.

ஆலோசித்து தெரிவிப்பதாக முதல்வர் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் சாலைகள் மோசமாக உள்ளது தொடர்பாக முதல்வரிடம் கேட்டதற்கு, “மழைக்கு பிறகு சாலைகள் சீரமைக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x