Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

மதிய உணவு, பேருந்து செலவை மிச்சப்படுத்த பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு : புதுச்சேரி அரசு மீது குற்றச்சாட்டு

புதுச்சேரி அரசானது கடந்த செப்டம்பரில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்தது. அதைத்தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்படும்; அன்றைய தினம் முதல் மதிய உணவும் தரப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் தொடர் மழையால் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை திறக்கப்படவில்லை. 9 முதல் 12-ம்வகுப்பு வரை மட்டும் நடந்து வருகிறது.

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க புதுச்சேரி அரசு எவ்வித உத்தரவையும் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக புதுச்சேரி தனியார் பள்ளிகள் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலர் கிறிஸ்டோபர் வெளியிட்ட அறிக்கையில், “புதுச்சேரி மாநில எல்லைக்கு உட்பட்ட தமிழகப் பகுதிகளான கண்டமங்கலம், கோட்டக்குப்பம் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் முழு நாள் பள்ளிகள் நடக்கிறது. மாணவர்கள் கற்றல் இடைவெளியை நிரப்ப தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. புதுச்சேரி அரசானது கல்வி கற்கும் விஷயத்தில் மெத்தனமாக உள்ளது. மதிய உணவு, பேருந்து செலவுகளை மிச்சப்படுத்த இந்நடவடிக்கையை எடுத்துள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது.

மாணவர்கள் கல்வி கற்க வழி செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு காலம் கடத்தினால் பெற்றோர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், பொதுநல அமைப்புகளை ஒன்றிணைத்து பள்ளிகளை திறக்கக்கோரி போராட்டம் நடத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x