Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

ராணுவ வீரரை கண்டுபிடிக்க முடியாமல் : 7 நாட்களாக மீட்பு படையினர் திணறல் :

வேலூர்: வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் மேல் விளாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(33). லடாக்கில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த மனோகரன், கடந்த 18-ம் தேதி மீண்டும் லடாக் செல்வதற்காக ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய வேலூர் சென்றார்.

பின்னர், விரிஞ்சிபுரம் பாலாற்று பாலத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதுவரை அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. தீயணைப்பு துறையினர் மற்றும் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், மனோகரன் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவரது மனைவி திவ்யா (28), தனது 2 பெண் குழந்தைகள், உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை தொடங்கி யது. நேற்று முன்தினம் நண்பகல் 12 மணி முதல் 3 மணிவரை விமானப் படையினர் தேடினர். இதில் ராணுவ வீரர் மனோகரன் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில், நேற்று காலை முதல் தீயணைப்பு படை வீரர்கள் 2 குழுக்களாக பிரிந்து ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 7 நாட்கள் கடந்தும், ராணுவ வீரர் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x