Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை வழக்கில் கைதான - பள்ளி முதல்வரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு :

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பள்ளி முதல்வர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவையில் பிளஸ் 2 மாணவி கடந்த 11-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பயின்ற பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (31) பாலியல் தொல்லை கொடுத்ததால், தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப்பதிவு செய்து மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி புகார் அளித்தும் சம்பவத்தை மறைத்து, நடவடிக்கை எடுக்காததால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (46) மீதும் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மீரா ஜாக்சன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை 24 -ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x