Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM
விரிவுரையாளர் பணி வாங்கித் தருவதாக கூறி, 15 பேரிடம் ரூ.1.24 கோடி மோசடி செய்த அண்ணன், தங்கை மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் டி.சிந்தலைச்சேரியைச் சேர்ந்தவர் பாஸ்டின் ஜேசுராஜ். இவரது சகோதரி ஆசிரியை புஷ்பமேரி. இருவரும் கிராம கல்வி சேவைக்காக அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த லீலிஆனந்தியிடம் (37), தாங்கள் டி.சிந்தலைச்சேரியில் கலைக் கல்லூரி தொடங்க உள்ளதாகவும், விரிவுரையாளர் பணி அதிகம் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய லீலி ஆனந்தி கடந்த 2019-ம் ஆண்டில் ரூ.20 லட்சத்தை பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளார். ஆனால் வேலையும் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதேபோன்று விரிவுரையாளர் பணி தருவதாகக் கூறி மேலும் 14 பேரிடமும் பணம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் ரூ.1 கோடியே 24 லட்சம் பெற்று அண்ணனும், தங்கையும் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து லீலிஆனந்தி புகாரின் பேரில் பாஸ்டின் சேசுராஜ், புஷ்பமேரி ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் மலர்விழி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT