Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

மாமுல் கேட்டு மருத்துவ அதிகாரி நெருக்கடி - பெரியகுளம் அருகே மருத்துவர் தற்கொலை :

மாமுல் கேட்டு மருத்துவ இணை இயக்குநர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் ஹோமியோபதி மருத்துவர் தனது கிளினிக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் என்ஆர்டி. தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(50). ஹோமியோபதி மருத்துவர். இவர் இப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார்.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமணன் கிளினிக்கை கடந்த ஆண்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிக குறைகள் உள்ளதாகவும், இதற்காக ரூ.20 ஆயிரம் தர வேண்டும். இல்லை என்றால் சீல் வைத்து விடுவதாகக் கூறியுள்ளார். இதனால் சீனிவாசன் அப்போது பணம் தந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாதம்தோறும் பணம் கேட்டு நெருக்கடி தந்ததால் சீனிவாசன் உயர் நீதிமன்றக் கிளையில், தான் கிளினிக் நடத்த யாரும் இடையூறு செய்யக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்.

இதற்கான உத்தரவு லட்சுமணனுக்கு அனுப்பப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் கடந்த 19-ம் தேதி கிளினிக்கை சீல் வைக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இதில் மனம் வருந்திய சீனிவாசன் தனது கிளினிக்கில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மனைவி சாந்தி புகாரின் பேரில் தென்கரை சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x