Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM
சேலம்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை கடந்த 4-ம் தேதி வியாழக் கிழமை கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, நேற்று விடுமுறை நாளில் சேலம் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. ஏற்காட்டில் கடந்த இரு நாட்களாக பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஏற்காடு படகு துறையில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகுகளில் ஏறி சவாரி செய்து, இயற்கை எழிலை ரசித்தனர். அதேபோல, மான்பூங்காவில் சிறுவர், சிறுமியர்கள் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சில்ரன்ஸ் பார்க், ரோஸ் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோயில், அண்ணா பூங்கா உள்ளிட்ட பல இடங்களிலும் வழக்கத்தை காட்டிலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.
தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேட்டூர் அணைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அதேபோல, எடப்பாடி பூலாம்பட்டி, கல்வடங்கம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT