Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 235 ஏரிகள் முழுமையாக நிரம்பின : துணை ஆறுகளிலும் நீர்வரத்து

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 235 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வரும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஏற்கெனவே பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருக்கிறது. அதேபோல், பாலாற்றின் துணை ஆறுகளிலும் நீர்வரத்து இருப்பதால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மழையளவு விவரம்

மோர்தானா அணைப் பகுதியில் 16, மேல் ஆலத்தூரில் 22.6, குடியாத்தம் 27.8, ராஜாதோப்பு அணை பகுதியில் 3, திருப்பத்தூரில் 2.3, ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க பகுதியில் 5, வாணி யம்பாடியில் 6, ஆலங்காயத்தில் 34, நாட்றாம்பள்ளியில் 6.4, ஆம்பூரில் 37.8, வாலாஜாவில் 4.6, ஆற்காட்டில் 6.2, சோளிங்கரில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

ஏரிகள் நிலவரம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் தற்போதுவரை 235 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 101 ஏரிகளில் 52 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 75%-க்கும் அதிகமாக 6 ஏரிகள், 50%-க்கும் அதிகமாக 4 ஏரிகள், 25%-க்கும் அதிகமாக 8 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளன. 31 ஏரிகளில் 25%-க்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் தற்போதுவரை 165 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. 18 ஏரிகளில் 75%-க்கும்அதிகமாகவும், 50% அதிகமாக 37 ஏரிகளிலும், 25% அதிகமாக 70 ஏரிகளிலும், 25%-க்கும் குறைவாக 79 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 18 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. 75%-க்கும் அதிகமாக 4 ஏரிகளிலும், 50%-க்கும் அதிகமாக 5 ஏரிகளிலும், 25%-க்கும் அதிகமாக 2 ஏரிகளிலும், 20 ஏரிகளில் 25%-க்கும் குறைவாகவும் நீர் இருப்பு உள்ளன. ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 11,466.80 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இதில், 7,988.73 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அணைகள் நிலவரம்

தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை நீர்த்தேக்கம் 37.72 அடி உயரத்துடன் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதற்கிடையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வரப்பெற்ற 989 கன அடி நீரை அப்படியே வெளியேற்றினர்.

அதேபோல், காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, அணையில் 19.52 அடி உயரத்துடன் 11.29 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்ப உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை முழுமையாக நிரம்பியதால் நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வரப்பெற்ற 43.79 கன அடி நீரை அப்படியே வெளியேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x