Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM
சென்னையில் தியாகராயநகர், மத்திய போக்குவரத்து பணிமனை உட்பட 16 பணிமனைகள் நவீனப்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் இருக்கும் மத்திய பணிமனையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக, மத்திய பணிமனை, அடையாறு, திருவான்மியூர், தி.நகர், சைதாப்பேட்டை, மந்தைவெளி, தாம்பரம், அண்ணா நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நவீனப்படத்தப்பட உள்ளன. இதில் ஒன்றான மத்திய பணிமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிமனைகளில் வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, பணியாளர்களின் ஊதியம், பிற பணப்பலன்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படும். போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,213 புதிய பேருந்துகள் மற்றும் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த நிகழ்வின் போது, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT