Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான - வரைவுக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க அவகாசம் :

மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு வரைவுக் கொள்கை தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நவ.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் இருந்து மறு குடியமர்வு செய்யப்படும் குடிசைப்பகுதி மக்கள் நியாயமாகவும் மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து புதிய குடிசைப்பகுதி மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வுக் கொள்கை உருவாக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை வரைவு, இணையதளத்தில் கடந்த அக்.12-ம் தேதி வெளியிடப்பட்டது. வரைவுக் கொள்கை குறித்து அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் 15 நாட்களுக்குள் அதாவது அக்.27-ம் தேதி வரை ஆன்லைன் உள்ளீட்டு படிவு இணைப்பில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் வந்துள்ளன. மேலும், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை ஏற்று கூடுதலாக 7 நாட்கள், அதாவது நவ.3-ம் தேதி வரை தங்களின் பரிந்துரை மற்றும் கருத்துக்களை ‘ http://www.tnscb.org/wp-content/uploads/2021/10/Draft-RR-Policy - tamil.pdf ’ என்ற ஆன்லைன் உள்ளீட்டுப் படிவத்தில் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x