Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM
சென்னையில் தடுப்பூசி முகாமை பார்வையிடச் சென்றபோது, அரசுப் பேருந்தில் ஏறி மகளிருக்கான இலவச பயண திட்டம் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் தீவிர கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டார்.அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று(அக்.23) 6வது முறையாக தீவிர தடுப்பூசி முகாம்50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம்,எழில் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கண்ணகி நகரில் உள்ள அரசு இ-சேவை மையம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை கேட்டறிந்தார்.அதன்பின் கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
கண்ணகி நகரில் கரோனா தடுப்பூசி முகாம் ஆய்வின்போது, அங்கு நின்றிருந்த எம்-19பி என்ற தி.நகர்- கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் ஏறி அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் விசாரித்தார். அப்போது பேருந்தில் இருந்த பெண்கள் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ்,தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT