Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் அடையாறு மண்டலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 1.08 கிமீ நீளத்தில் ரூ.1.75 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை தலைமை செயலர் வெ.இறையன்பு நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும், சாலைப் பணிகளை மேற்கொள்ளும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து புதிய சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சாலை உயரமாவது தடுக்கப்படுவதுடன், சாலையோர குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் பருவ மழை காலங்களில் நீர் புகாமல் தடுக்க முடியும் என்று அறிவுறுத்தினார்.
அடையாறு மண்டலத்தில் ரூ.2.23 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உணர்வு பூங்காவில் (Sensory Park) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் 175-வது வார்டில், சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ரூ.9.41 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா பணிகளையும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டி.சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT