Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM

24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கான வாடிக்கையாளர் சேவை மையம் தொடக்கம் :

கோவை: கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கான வாடிக்கையாளர் சேவை மையம் செயல்படத் தொடங்கியது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கான முதல் வாடிக்கையாளர் சேவை மையம், மேட்டுப்பாளையம் சாலை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், பொதுமக்கள் புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல் வழங்கப்படும். குடிநீர் குழாய் கசிவு, மாசுபட்ட குடிநீர், குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து புகார்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

இங்கு குடிநீர் கட்டணத்தை ரொக்கம், வங்கி அட்டை, அலைபேசி செயலிகள், தானியங்கி இயந்திரங்கள் மூலம் செலுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. அதோடு, 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் அவசியம், செயல்முறை, கட்டணம் முதலான அனைத்து ஐயங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்படும். வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மையம் செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x