Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM
உலக சுற்றுலா தினத்தையொட்டி விடுமுறை நாளான நேற்று கீழடி, கொந்தகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் செப்.30-ம் தேதியுடன் அகழாய்வுப் பணி முடிவடைய உள்ளது.
உலக சுற்றுலா தினம் இன்று (செப்.27) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விடுமுறை நாளான நேற்று கீழடி, கொந்தகையில் அகழாய்வு இடங்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டன.
இதையடுத்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கீழடியில் குவிந்தனர். அவர்கள் தொல்பொருட்களை பார்வையிட்டதோடு, அகழாய்வு குழி அருகே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அதேநேரம் குறைவான தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதால் பலர் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே, தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பில் கரகாட்டம், சிலம்பம், நாட்டுப்புறப் பாடல்கள், சுருள் கத்தி சுற்றுதல், இசை வாத்தியங்கள் இசைத்தல் போன்றவை நடந்தன. கள்ளிக்குடி அரசு பள்ளி 4-ம் வகுப்பு மாணவி முத்துலட்சுமி ஆடிய கரகாட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT