Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்கல், பெண்ணேஸ்வரமடம், கொட்டாவூர், ஜெய்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடந்த சில வாரங்களாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால், கால்நடைகள் உயிரிழந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கேஆர்பி அணை இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பயன்பெறுவோர் சங்கத் தலைவர் சிவகுரு கூறியதாவது:
இப்பகுதியில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு மக்கள் வசித்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பல்வேறு கிராமங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி வருகிறது.
நோய் தாக்கப்பட்ட பசுமாடுகள் பல உயிரிழந்துள்ளன. குறிப்பாக பெண்ணேஸ்வர மடம், நெடுங்கல் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும், கடந்த ஓராண்டாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடவில்லை. இதனால், கால்நடைகளுக்கு நோய் தாக்கம் அதிகளவில் பரவி உயிரிழப்பதால், விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த கால்நடை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT