Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் : அதிகாரிகளிடம் முறையிட்ட இலங்கை தமிழர்கள்

ஆழியாறில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஆழியாறில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தனர்.

கோவை மாவட்டம் ஆழியாறு, கோட்டூர் பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் பெயிண்டிங், கட்டிட வேலை, விவசாய கூலி வேலை, பாரம் தூக்கும் வேலைகளுக்குச் சென்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில், மாதந்தோறும் உதவித் தொகை, ரேஷன் பொருட்கள், ஆண்டுக்கு ஒரு முறை கோ-ஆப் டெக்ஸ் கடைகளில் துணி, வீடுகளுக்கு இலவச மின்சாரம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த அகதிகள் மறுவாழ்வு துறை இயக்குநரின் நேர்முக உதவியாளர் ராமதிலகம் உள்ளிட்ட அதிகாரிகள், முகாமில் தங்கியுள்ளவர்களிடம் நேற்று குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது அவர்கள், “சேதமடைந்துள்ள வீடுகளை சீரமைக்கவேண்டும். முதியோர் உதவித் தொகை வழங்குவதுடன், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்” என்றனர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், “குடியுரிமை குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

ஆய்வின்போது, ஆனைமலை வட்டாட்சியர் விஜயகுமார், முகாம் தனி வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், சிவசண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x