Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

கோவை சின்ன தடாகத்தில் செங்கல் சூளை ஆக்கிரமித்திருந்த - ரூ.6 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்ட இந்து அறநிலைய துறையினர் :

கோவை சின்ன தடாகம் பகுதியில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்ட செங்கல் சூளையின் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்.

கோவை

கோவை சின்ன தடாகம் அருகே, 10 ஆண்டுகளாக கோயில் நிலத்தை ஆக்கிரமித்து இயங்கிய செங்கல் சூளையை அகற்றி ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் நேற்று மீட்டனர்.

கோவை சின்ன தடாகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதை யடுத்து, அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அதில், கோயிலுக்கு சொந்தமான பகுதியில் உள்ள ரூ.6 கோடி மதிப்புள்ள 8.8 ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை, 10 ஆண்டுகளாக ஆக்கிரமித்து செங்கல் சூளையில் தயாரிக்கப்படும் செங்கலை உலர்த்த பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, செங்கல்சூளையை நடத்தி வந்த ரங்கராஜ், தென்னரசு ஆகியோருக்கு 3 முறைநோட்டீஸ் அளித்தனர். ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு அதில் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ரங்கராஜ் இடத்தை காலி செய்து விட்டார். அதேசமயம், அவரது ஷெட்அப்படியே இருந்தது.

இதைத் தொடர்ந்து, இணை ஆணையர் செந்தில்வேலவன் உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர்.

பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, செங்கல் சூளையின் செங்கல் உலர்த்தும் இடங்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கண்ட இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, மீட்கப் பட்ட இடம் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையை அதிகாரிகள் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x