Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

விபத்தில் சைக்கிளை இழந்த சிறுவனுக்கு : சைக்கிள் பரிசளித்த காவல் ஆய்வாளர் :

கோவை

கோவை தடாகம் சாலை பால் கம்பெனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் சுபாஷ் சந்திர போஸ்(14). மாநகராட்சிப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சுபாஷ் சந்திரபோஸ், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது கார் மோதியது. இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது சைக்கிள் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப்சிங் விசாரித்தார். அப்போது, சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன், பெற்றோரின் சிரமத்தைப் போக்க படித்துக் கொண்டே பகுதி நேர பணிக்கு சென்று வந்ததை அறிந்தார்.

இதையடுத்து, சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கிக்கொடுக்க ஆய்வாளர் முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் சுபாஷ் சந்திரபோஸை கடைக்கு அழைத்துச் சென்ற ஆய்வாளர் பிரதாப்சிங், ரூ.4,800 மதிப்புள்ள புதிய சைக்கிளை வாங்கி அவருக்கு பரிசளித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிறுவனும், பெற்றோரும் காவல் ஆய் வாளருக்கு நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x