Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

பெங்களூருவில் இருந்து - வேலூருக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல் :

பெங்களூருவில் இருந்து வேலூருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடியில் எஸ்.பி., தனிப்பிரிவு காவல் துறையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி தனிப்படை காவல் துறையினர் சோதனையிட்டனர். அதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அட்டை பெட்டியில் மறைத்து வைத்து பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு கடத்தி வருவது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து, காருடன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை காவல் துறையினர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த நவீத் (27), ஜாபர்கான் (25) ஆகிய 2 பேரை கைது செய்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் பேரில் அம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x