Published : 31 Jul 2021 03:13 AM
Last Updated : 31 Jul 2021 03:13 AM

சொந்த மாநிலம் திரும்ப அனுமதிக்கப்படாத - 8 பெண் தொழிலாளர்கள் தனியார் பஞ்சாலையிலிருந்து மீட்பு :

கோவை அருகே தனியார் பஞ்சாலையில் பணியாற்றி, சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படாத ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 7 பெண்களை சிஐடியு தொழிற்சங்கத்தினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பஞ்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கிப் பணி செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட மாநிலத்தில் இருந்து 18இளம் பெண்களை ஆலை நிர்வாகம்வேலைக்காக கோவைக்கு அழைத்து வந்துள்ளது. நாள்தோறும் ரூ.200 கூலி என நிர்ணயித்து, அதிலும் உணவுக்கு பிடித்தம்செய்தும், 12 மணி நேரம் வேலை வாங்கியதாகவும் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சொந்த ஊருக்கு செல்வதாக ஆலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆலை நிர்வாகம் அனுப்ப மறுத்ததால் மனஉளைச் சலுக்கு ஆளான அப்பெண்கள் ஊரில் உள்ள உறவினர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் கரூர் மக்களவை உறுப்பினர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு, அங்கிருந்து சிஐடியு கோவை மாவட்ட தலைவர்சி.பத்மநாபனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சிஐடியு சார்பில்அறிவிப்பு வெளியானது. பிறகு தொடர்புடைய ஆலையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, பஞ்சாலையில் இருந்துவெளியேற விரும்பிய 7 பெண் களை ஆலை நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியில் அனுப்பி வைத்துள்ளது.

அவர்களை சிஐடியு நிர்வாகிகள் மீட்டு நேற்று ரயில் மூலமாக ஜார்க்கண்ட் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சி.பத்மநாபன் கூறும்போது, ‘கரூர் மக்களவை உறுப்பினர் அலுவலகத்திலிருந்து கடந்த 28-ம் தேதி தகவல் கிடைத்தது. அப்போது தொடங்கி பெண்களை மீட்க பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டோம். நேற்று (நேற்றுமுன்தினம்) ஆலை முன் நாங்கள்கூடிய பிறகே 7 பெண்களும் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை மீட்டு உணவளித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம். 18 பேரில் 7 பெண்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். பிற 11 பேரின் நிலை குறித்து தொடர்புடைய ஆலை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x