Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

‘கல்யாணபுரம் ஏரியை பாதுகாக்க வேண்டும்’ :

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்துவிட்டு வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்.

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே கல்யாண புரம் கிராமத்தில் கல்குவாரி செயல்படும் பகுதியில் உள்ள ஏரியை பாதுகாக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷிடம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நேற்று வலியுறுத்தி உள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கல்யாண புரம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் 40 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அதன் நடுவே 2 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. அந்த ஏரியை தூர்த்துவிட்டு கல் உடைத்து வருகின்றனர். உரிமம் பெறாமல் பணி நடைபெறுகிறது. இதற்கு, 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிகார பலம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி பணி தொடர்கிறது. ஏரியை பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக ஆட்சியரிடம் முறை யிட்டுள்ளோம்.

செங்கம் அடுத்த பெரிய கோளாப்பாடி கிராமத்தில் உள்ள 57 ஏக்கர் நிலத்தை, சிப்காட் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர். அதன் நடுவே 2 குளம் உள்ளது. அந்த குளத்தை மூடிவிட்டு தொழிற்சாலை கட்டுமானப் பணியை தொடர முயற்சி செய்கின்றனர். இதனால், 200 விவசாயக் கிணறு மற்றும் ஆழ் துளைக் கிணறுகள் வறண்டுவிடும். விவசாய சாகுபடி பாதிக்கப்படும். குளங்களை அழிக்கக்கூடாது. ஏரி, குளங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என ஆட்சியரிடம் எடுத்துரைத்து வலியுறுத்தி உள்ளோம். எங்களது 2 கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்த வாரம் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x