Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

திருச்சி மாநகருக்குள் ‘ஐ.டி பார்க்’ வளாகம் கொண்டு வர முயற்சி: அமைச்சர் :

திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் ‘திசை காட்டும் திருச்சி' என்ற பெயரிலான இணையவழி வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க பதிவு செய்தவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்கான முகாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது.

முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பேசும் போது, ‘4 மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 3 முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். முதற் கட்ட முகாமில் கலந்துகொள்ள 15,231 பேர் பதிவு செய்துள்ளதும், 170 கம்பெனிகள் முன் வந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புகளைப்பெற ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்காகவே திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தேசியக் கல்லூரி எதிரில் திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதில் போட்டித் தேர்வை எதிர் கொள்ளவும், ஆங்கிலத்தில் உரையாடவும் பயிற்சி அளிக்கப்படும். திருச்சியைச் சேர்ந்த 2,000 பேருக்காவது மத்திய அரசு பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இலக்கு' என்றார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘நவல்பட்டு ஐ.டி பார்க்கில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் ஐ.டி பார்க்கின் ஒரு வளாகத்தை திருச்சி மாநகரப் பகுதிக்குள் கொண்டு வர முயற்சிப்பேன். திருச்சியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் அருண் நேரு, வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளரான பாதிரியார் ஜெகத்கஸ்பர், தொடர்பாளர்களான பேராசிரியர் லெட்சுமிமேனன், கலைச்செல்வன், திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x